சென்னை முதல் குமரி வரை.. அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் நெல்லை, தென்காசி, தேனி, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று நெல்லை, தென்காசி, குமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில் இடங்களில் காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக பெருகி வருகிறது. குற்றால அருவியிலும் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இன்று இரவு 10 மணி வரை திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் லேசான இடி மற்றும் மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட ஒரு வார அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று காலை (26.07.2024) 08:30 மணியளவில் மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலபகுதியை நோக்கி நகர்ந்து, இன்று காலை (27.07.2024) மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா பகுதியில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூலை 29ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications