நள்ளிரவு 1 மணி வரை.. சென்னையில் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்! மக்களே உஷார்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், கோவை, நீலிகிரி, குமரி உள்பட 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் எழும்பூர், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கு திசை வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தென்காசி, குமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரம்: நீலகிரியில் நேற்றும், இன்றும் கனமழை பெய்தது. இதேபோல் தென்காசியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கடகடவென உயர்ந்தது. ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதேபோல் மழையின் காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 மாவட்டங்கள்: தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால் இன்று இரவு முதல் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், நீலிகிரி, திருப்பூர், கோவை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் எங்கெங்கு?: சென்னையை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் எழும்பூர், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, தாம்பரம் மற்றும் வண்டலூர் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு வார அப்டேட்: முன்னதாக அடுத்த ஒரு வாரத்திற்கான மழை அப்டேடில் வானிலை மையம் கூறியிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
31 ஆம் தேதி: நாளை ஜூலை 31 ஆம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இடி மின்னலுடன் கூடிய: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications