ஆபீஸ் போறவங்க ரெயின் கோட்டை எடுங்க! சென்னை, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூரில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது போல் இன்று 13 மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

கடந்த 6 மணி நேரமாக இந்த வேகத்திலேயே நகர்ந்து வருகிறது. இது திரிகோணமலையிலிருந்து 240 கி.மீ. தூரத்திலும் நாகையில் தென்கிழக்கு திசையில் இருந்து 330 கி.மீ. தூரத்திலும் புதுவையில் தென்கிழக்கு திசையில் இருந்து 390 கி.மீ. தூரத்திலும், சென்னையின் தென் கிழக்கு திசையிலிருந்து 430 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அநேகமாக இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நாளை காலை காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும்.
அப்போது காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் சில நேரத்தில் 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனினும் இந்த அமைப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று முதலே மழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதாவது இன்று காலை 10 மணி வரை சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுவை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் குறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 480 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் -மாமல்லபுரத்துக்கும் இடையே வரும் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக்கூடும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின்னர் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 30-ம் தேதி) கரையைக் கடக்கக்கூடும். கரையைக் கடக்கின்றபோது, பலத்த காற்றானது, மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக, அடுத்து வரும் 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications