சென்னையின் 5 மேஜர் ஏரிகளில் திடீரென நடக்கும் மாற்றம்! என்ன காரணம்? பருவமழை வேற நெருங்குதே!
சென்னை: இன்னும் சில வாரங்களில் சென்னையில் பருவமழை பெய்யத் தொடங்க உள்ளது. பருவமழையை எதிர்கொள்ளும் பணிகளை இப்போதே தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் தொடங்கிவிட்டது. இதற்கிடையே பருவமழையைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளில் இருந்து நீர் இப்போது 50% திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சென்னையில் பருவமழை சீசன் என்றாலே இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு பயம் வந்துவிடும். ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் மழையின் காரணமாக நகரில் பல இடங்களில் பாதிப்பு மோசமாக இருந்தது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

மழை: கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றாலும் கூட நிலைமை இன்னும் முழுமையாகச் சீராகவில்லை. இந்தாண்டு சென்னையில் மிக விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. சென்னையைச் சுற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்பாராத அளவுக்கு மழை பெய்தாலும் வெள்ள பாதிப்பு மோசமாக இல்லாமல் இருக்க நீர்வளத்துறை இப்போதே தயாராகி வருகிறது.
குறிப்பாகக் கனமழையால் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க நகரைச் சுற்றியுள்ள ஐந்து ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றி வருகிறது. இந்த ஏரிகளில் பாதி அளவுக்கு மட்டுமே நீரை வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவுக்கு மழை பெய்தாலும் கூட நிலைமை சமாளிக்கவே இந்த நடவடிக்கையை நீர்வளத்துறை எடுத்துள்ளது.
திறந்துவிடப்படும் அணைகள்: இதற்காக ஆவடி, அயப்பாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் ஆகிய ஏரிகளில் இருந்து கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஏரிகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டினால் கூட பாதிப்பு மோசமாக இருக்கும். இதன் காரணமாகவே இப்போதே நாங்கள் சிறிது தண்ணீரை வெளியேற்றுகிறோம். இந்தாண்டு இறுதி வரையிலும் இதேபோல ஏரிகளில் பாதி கொள்ளளவு நீரையே வைத்திருக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இந்த முறை சென்னையும் தப்பாது.. தமிழகத்தில் அடித்து நொறுக்க போகுது கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை
கடந்தாண்டு என்ன நடந்தது: கடந்தாண்டு கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் ஏரிகள் உடைந்து, அருகில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மழைக்கு முன்பு மாதவரம் ஏரியில் மிகக் குறைந்த நீர் இருப்பே இருந்தது. இதனால் கடந்தாண்டு புயலில் மழை பெய்த போது நிலைமை ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தது.

மேலும், கடந்தாண்டு மற்ற 4 ஏரிகளில் போதிய மதகுகளும் இல்லாத சூழலே இருந்தது. இதனால் ஏரியில் இருந்த நீரை எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக வெளியேற்ற முடியவில்லை. கடந்தாண்டு நடந்த தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக இந்த ஆண்டு அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் மாதவரத்தில் உள்ள ஏரிகளில் தலா நான்கு மதகுகள் அமைக்கப்பட்டு, இப்போதே உபரி நீர் வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஏரிகள் பாதியளவு காலியாக இருந்தால் நல்லது தான். மழை அதிகம் பெய்தாலும் கையை மீறிச் செல்லாமல் இருக்கும். இதன் பிறகு பருவமழை சீசனில் மழை அதிகம் பெய்தாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் திறந்துவிடலாம். இதனால் அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் பகுதிகளில் பாதிப்பு குறையும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications