‛டமால் டுமில்’.. சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. அடுத்த 48 மணிநேரம் எப்படி இருக்கும்? விபரம்
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் வீடு திரும்புபவர்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் சென்னை வானிலை நிலவரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை என்பது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பகலில் வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலத்தை போல் வெயில் அடித்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.

இருப்பினும் சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் இருந்தாலும் மாலையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தான் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமி்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கோவை, திருப்பூர், தனி, திண்டுக்கல், மதுரை, சிவங்கை, வேலூர், திருப்பத்தூர் தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் இல்லை. இருப்பினும் கூட இன்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்றும் நன்றாக வீசியது. இத்தகைய சூழலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் இன்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், திருவிக நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம் ம்றறும் அதனை சுற்றிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம், புழல் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று மாலையில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இதுதவிர மாலை 5 மணி நிலவரப்படி சென்னை மற்றும் அதனையொட்டி பிற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணிநேரத்துக்குள் எழும்பூர், மாம்பலம், புரசைவாக்கம், தண்டயைார்பேட்டை, மதுராந்தகம், உத்திரமேரூர், அயனாவரம், பெரம்பூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மிதமானது முதல் கனமை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடுன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 36.17 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications