வடகிழக்கு பருவமழை வலுவடையாதது ஏன்? தமிழகத்தில் அக்டோபரில் மழை அளவு என்ன?.. பாலசந்திரன் தகவல்!
சென்னை: தமிழகம், புதுவையில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 43 சதவீதம் குறைவு என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் அக்டோபர் மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில் வடகிழக்கு பருவழை இயல்பை விட 43 சதவீதம் குறைவாக உள்ளது.

123 ஆண்டுகளில் அக்டோபரில் 9ஆவது முறையாக வடகிழக்கு பருவமழை இயல்வை விட குறைவாக உள்ளது. தமிழகம்,புதுவையில் அக்டோபர் மாதம் 98 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான மழை 171 மி.மீ. ஆகும். அது போல் கன்னியாகுமரியில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.
6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் 17 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவும் மழை பெய்துள்ளது. தமிழகத்தையொட்டி உள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது அரபிக் கடலில் ஒரு புயலும் வங்கக் கடலில் ஒரு புயலும் உருவாகி நகர்ந்து சென்றுவிட்டது. இதனால் காற்றின் திசையில் மாறுபாடு உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருக்கிறது. ஆனால் காற்று வழக்கம் போல் வீசி வருகிறது. காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டால் நல்ல மழை பெய்யும்.
இல்லாவிட்டால் இப்படித்தான் விட்டு விட்டு பெய்யும். காற்று வேகமாக வீச ஏதேனும் நிகழ்வுகள் (காற்றழுத்தம், வளிமண்டல சுழற்சிகள்) தேவை. அவை இருந்தால் மழை தீவிரமடையும். இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நவம்பர் 3 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை , விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 5, 6 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32- 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 24- 25 டிகிரி செல்சியஸாக இருக்கக் கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. இவ்வாறு வானிலை மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications