வங்கக் கடலில் காற்றழுத்தம்! புதுக்கோட்டை முதல் டெல்டா வரை கனமழை பெய்யும்! வானிலை மையம்!
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (திங்கள்கிழமை) காலை 8.30 மணி அளவில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இது இன்று (செவ்வாய் கிழமை), வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வடக்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடல்
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (08-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மழை
ஏப்.9ம் தேதி முதல் ஏப்.13-ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று (08-04-2025) முதல் 11-04-2025 வரை, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
வானம் மேகமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (செவ்வாய் கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடலோர பகுதிகள்
தமிழக கடலோரப் பகுதிகளில், ஏப்.10 மற்றும் ஏப்.11-ம் தேதிகளில், தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக் கடலில் மாற்றம்
வங்கக்கடல் பகுதிகளில், இன்று (செவ்வாய் கிழமை) தெற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களுக்கு இதமாக ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் உள்ளது. திருப்பூரில் வீடுகளுக்குள் தண்ணீர் வரும் அளவுக்கு கனமழை பெய்தது. அது போல் மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்தது. சென்னையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.












Click it and Unblock the Notifications