சென்னையன்ஸ் நோட் பண்ணுங்கப்பா.. இனி மேம்பாலத்தில் காரை பார்க் பண்ண வேண்டாம்! அசத்தல் கண்டுபிடிப்பு.!
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ள பாதிப்பு அச்சம் காரணமாக வேளச்சேரி உள்ளிட்ட மேம்பாலங்களில் பொதுமக்கள் தங்கள் கார்களை நிறுத்தி வருகின்றனர். ஒருபுறம் இது சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியல் ஆன நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் தங்கள் கார்களை காக்க விரும்புவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் இருந்து கார்களை பாதுகாக்க ஒரு சூப்பர் கண்டுபிடிப்பு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னையில் கடந்தாண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது. எப்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வேளச்சேரியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மரங்களும் விழுந்தன.

குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு வாரத்திற்கு மேல் மழை நீர் வடியாததால் ஏராளமான கார்கள் சேதம் ஆகின.
இந்நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே சென்னைக்கு கனமழை எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்திருக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் 17ஆம் தேதி வரை கனமழை ம் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதை அடுத்து ஆலோசனை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் வேளச்சேரி வாசிகள் தற்போதைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் உடமைகளை பாதுகாக்கும் நெறிமுறைகளை கையாள தொடங்கியுள்ளனர். குறிப்பாக வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே இருக்கும் மேம்பாலத்தில் தங்கள் கார்களை நிறுத்தியுள்ளனர்.
கடந்த வருடம் ஏராளமான கார்கள் பழுதானதால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய இடம் கிடைக்காது என்பதால் இரண்டு நாட்கள் முன்பதாகவே தற்போது வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி உள்ளனர்.
இதனால் இருபுறமும் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை அடுத்து போலீசார் அந்த கார்களுக்கு அபராதம் விதித்தனர். இது கடும் கண்டனங்களை பெற்ற நிலையில் அது வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் தங்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி உள்ளதால் அது பிரம்மாண்ட கார் பார்க்கிங் போலவே காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் தற்போது சென்னை வாசிகளின் அச்சத்தை போக்கும் வகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அதாவது ஹைட்ராலிக் இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கார்களை தரையில் இருந்து சுமார் மூன்று முதல் ஐந்து அடி வரை உயர்த்தும் வகையில் இயந்திரம் ஒன்று ஏற்கனவே வெளிநாடுகளிலும் இந்தியாவில் சில இடங்களிலும் பயன்பாட்டில் இருக்கிறது. வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன்களில் இருக்கும் பிரம்மாண்ட ஹைட்ராலிக் லிஃப்டிங் இயந்திரங்களைப் போல் அல்லாமல் மிக எளிதாக இருக்கும் இந்த ஹைட்ராலிக் இயந்திரத்தை வீட்டுக்குள்ளேயே பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இட வசதி இருந்தால் வீட்டின் முன்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
தற்போது இந்த ஹைட்ராலிக் இயந்திரம் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வரும் நிலையில் ’எங்க விக்குதுன்னு கேட்டு சொல்லுங்க’ என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஒருவேளை அடுத்த வருடம் சென்னையில் இது பயன்பாட்டுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications