தென் மாவட்டங்களில் அதீத கனமழை- வானிலை மைய எச்சரிக்கை கிடைத்ததில் தாமதம்- முதல்வர் ஸ்டாலின் புகார்!
டெல்லி: தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை கிடைப்பதில் சற்று தாமதம் இருந்ததாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
தென் தமிழ்நாடு மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. இன்றுதான் சற்று மழை தணிந்திருக்கிறது. பெருமழை காரணமாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
முன்னதாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு, புயலின் போது மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள், மத்திய அரசு குழு பார்வையிட்டு தெரிவித்த கருத்துகளை விவரித்தார்.
மேலும் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஓய்வதற்குள் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் அதீத கனமழை கொட்டியது. ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 94 செமீ அளவுக்கு கொட்டியது. சென்னை வானிலை மையம் குறிப்பிட்டிருந்த மழை அளவை விட பல மடங்கு பெருமழை கொட்டியது. சென்னை வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை சற்று தாமதமாக கிடைத்தது. ஆனாலும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. தற்போதும் மீட்பு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜும், சென்னை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக முன்னெச்சரிக்கையை தரவில்லை என குற்றம் சாட்டி இருந்தார். தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை சற்று தாமதமாக கிடைத்தது என குற்றம்சாட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications