கோவையில் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த பேருந்து.. வெதர்மேன் சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா?
கோவை: "கோவையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சேலத்திலும் மழை பெய்துள்ளது. தென் தமிழக பகுதிகளான நெல்லை, விருதுநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதேசமயம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்/ நெல்லூர் கடற்கரைகளை நோக்கி நகர்ந்த பிறகும், வடக்கு உள்பகுதிகள் அசத்துகின்றன." எனத் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
கோவையில் இன்று மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தனியார் பேருந்து ஒன்று வெள்ள நீரில் தத்தளித்தது.

இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வந்தது. கோவை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. கோவை காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், விமான நிலையம், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, கணபதி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இன்று மாலை இடியுடன் தொடர் மழை பெய்தது. அதேபோல கோவை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மின்னல் மற்றும் இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, கோவை சிவானந்தா காலனி சாலை சாயிபாபா கோவில் பகுதியில் தனியார் பேருந்து, இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், கோவையில் பெய்த கனமழை குறித்து பதிவிட்டுள்ளார். கனமழையால் மழைநீர் தேங்கிய நிலையில், அதில் தனியார் பேருந்து சிக்கிக்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரதீப் ஜான்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், "கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சேலத்திலும் மழை பெய்துள்ளது. திருச்சியில் விரைவில் மழை பெய்யும். தென் தமிழக பகுதிகளான நெல்லை, விருதுநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்/ நெல்லூர் கடற்கரைகளை நோக்கி நகர்ந்த பிறகும், வடக்கு உள்பகுதிகள் பரவாயில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications