அரபிக்கடலில் அஸ்னா கௌம்பிருச்சிப்பா.. தமிழகத்துக்கு மழை பிச்சு உதறுதா? செல்வக்குமார் இப்படி சொல்றாரே
சென்னை: அஸ்னா புயல் கிலியை தந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த நிலவரத்தை தெளிவாக விவரித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் செல்வக்குமார்.
மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் தெரிவித்திருக்கிறது.

வங்கக்கடல்: அதாவது, காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்றும் அதற்கடுத்த இரண்டு தினங்களில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறியிருந்தது.
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் 2 நாளைக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
செல்வக்குமார்: இந்நிலையில், தனியார் வானிலை செல்வக்குமார் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து முழுமையான தகவல்களை விலாவரியாக தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:
"கடந்த 24 மணி நேர மழைப்பொழிவை பொறுத்தவரை, அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.. இதில் அதிகப்பட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் 47 மில்லி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது.. முத்துப்பேட்டை 8 மில்லி மீட்டர் நிறைய மழைப்பொழிவு பொழிந்துள்ளது. அதுபோலவே இன்னும் பல்வேறு பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு பதிந்துள்ளது.
அரபிக்கடல்: நேற்றைய தினம் குஜராத்தில் நீடித்து கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மணடலம், இன்னும் குஜராத்தை விட்டு இறங்கவில்லை. அரபிக்கடலில் கராச்சி கரையோரமாக இன்றைக்கு மதியம் 1 மணிக்கு பிறகு அரபிக்கடலில் இறங்க உள்ளது.. அது அஸ்னா என்ற புயலாக அரபிக்கடலோரம், பாகிஸ்தான் கரையோரம் உருவாகி, ஈரான் நாட்டு கரையோரமாக மேற்கு நோக்கி நகர்ந்து, ஓமன் நாட்டை நோக்கி பயணிக்க இருக்கிறது..
வங்கக்கடல் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நன்கமைந்த காற்றழுத்த பகுதியாக, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவெடுத்துள்ளது.. இன்று மாலைக்குள் அது காற்றழுத்து தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுக்கும்.
ஆந்திரப்பிரதேசம்: இது ஆந்திரப்பிரதேச கரையோரமாக 3ம் தேதி வரை மிக கனமழை பொழிவையும், வடக்கு ஆந்திர பிரதேசம், விசாகப்பட்டினத்துக்கு வடக்கே நிலைப்பெற்று, புவனேஸ்வரத்துக்கும், விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒரிசா எல்லை பகுதி வழியாக மேற்கு நோக்கி
கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக, தெலுங்கானா, ஆந்திரபிரதேச வடக்கு பகுதி, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, நாக்பூர் வரை கனமழை, மிக அதிக மழை பெய்யக்கூடும்.. இன்றிலிருந்து 3ம் தேதி வரை தொடர் மழையாக இருக்கும். அந்தவகையில், செப்டம்பர், 1, 2 என்ற 2 நாட்களும் அதிக மழைப்பொழிவு ஹைதராபாத், விசாகப்பட்டினம், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கருக்கு கிடைக்க உள்ளது.
ஆந்திர கரையோரம்: அந்தவகையில், தென்மேற்கு பருவகாற்று 60 சதவீதத்துக்கு மேல் அரபிக்கடல் நோக்கி பக்கம் திருப்பியிருக்கிறது.. இதில், 35 சதவீதம் இலங்கைக்கு கிழக்கு புறமாகவே, வங்கக்கடலோரம், ஆந்திர கரையோரம் பயணிக்கிறது. மீதமுள்ள 5 சதவீதம் மட்டுமே உயர் அழுத்தம் காரணமாக கேரள கரையோரம் நோக்கி குறைவாகவே திரும்பி வருகிறது. தற்போது கேரளா கடலோரத்தில் நுழையக்கூடிய 5 சதவீதம் தென்மேற்கு பருவக்காற்று கேரளாவில் தென்மேற்கு பருவமழையயாக லேசாக, மிதமாக துவக்கியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை சற்று தீவிரமடைந்துள்ளது.. இந்த சாரல் மழையானது, கோயம்புத்தூர் மேற்கு பகுதிக்கும், உடுமலை, பொள்ளாச்சி, உள்ளிட்ட கோவை தெற்கு மற்றும் திருப்பூர் மாவட்ட தெற்கு வரை சாரல் மழை தந்து கொண்டிருக்கிறது.. கருமேகத்தை ஏற்படுத்தி சாரல் துளிவிழுந்து கொண்டே கொண்டிருக்கிறது..
சாரல் மழை: தேனி மாவட்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கூடலூரில் மழைபொழிவு தென்படுகிறது.. திருநெல்வேலி தென்காசியில் கூடுதல் மழையை தரக்கூடும்.. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் தீவிரமடையும்வரைதான் இந்த மழைப்பொழிவு காணப்படும்.
தமிழ்நாட்டில் நேற்று பெய்த மழையில், பாதியளவுதான் இன்று பெய்யும்.. வெயிலும் பெரிதாக இருக்காது. மேற்கு மாவட்டத்தில் வெயில் இருந்தாலும், வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழைப்பொழிவை தந்து கொண்டிருக்கும்.
கொடைக்கானல், திண்டுக்கல், நத்தம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரியில் ஆங்காங்கே மழைப்பொழிவு தென்படுகிறது.. ஆனாலும், நேற்றையதினம்போல் 5 செ.மீ. மேல் இன்று மழைப்பொழிவு இருக்காது.
மழைப்பொழிவு: நம்பர் 1 மழைப்பொழிவு இடத்தை ஆந்திர பிரதேசம் தெலுங்கானா, ஒடிசாதான் பிடித்திருக்கிறது. தமிழகத்துக்கு மாலை நேரங்களில் ஆங்காங்கே, லேசான மழை பெய்யும்.. அதுகூட 3 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு போகாது..
வால்பாறை, நீலகிரி மேற்கு, கன்னியாகுமரி பகுதியில் 5 முதல் 8 சென்டி மீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும். வரக்கூடிய 2ம் தேதிவரை, நீலகிரியில் மட்டும் அதிகப்பட்சம் மழைப்பொழிவு இருக்கும்.. அதுவும் 10 சென்டி மீட்டருக்குமேல் போகாது" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்றைய தினம், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications