சென்னையை நெருங்கும் போது.. டிட்வா புயல் வலுவிழந்திருக்கும்! வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை: இலங்கை அருகே உருவான டிட்வா புயல் தற்போது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் சென்னையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புயல் சென்னையை நெருங்கும் போது வலுவிழந்திருக்கும் என்று ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, நவ.28ம் தேதி நள்ளிரவு 11 மணி நிலவரப்படி சென்னைக்கு தெற்கே 490 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. சரியாக சொல்வதெனில் இலங்கையின் திரிகோண மலைக்கும், முல்லை தீவுக்கும் இடையே நிலை கொண்டிருக்கிறது.

இது நாளை மதியம் 12-2 மணிக்கு இடையில் ஜாஃப்னாவை கடக்கும். தரைப்பகுதியில் இருந்து கடல் பகுதிக்கு வந்த பின்னர் மீண்டும் அது வலுவடைய முயற்சிக்கும். ஆனால் போதுமான ஈரப்பதம் கொண்ட காற்று அதற்கு கிடைக்காது. குறிப்பாக புயலின் கீழ் மட்டத்திற்கும், மேல் மட்டத்திற்கும் இடையே காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்படும். இதனை ஆய்வாளர்கள் செங்குத்து காற்று வெட்டு என்று கூறுகிறார்கள். இதனால் புயலின் மையம் ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் அலைக்கழிக்கப்பட்டு புயல் வலுவிழக்கும்.
புயல் மேலும் வலுவடைய வேண்டும் எனில் அதற்கு ஈரப்பதம் மிக்க காற்று தேவை. ஆனால் இலங்கையை விட்டு வங்கக்கடலுக்கு புயல் வரும்போது அங்கு உலர்ந்த காற்றுதான் இருக்கும். இது உள் இழுக்கப்பட்டு, புயல் அமைப்பை பலவீனப்படுத்தும். எனவே புயல் சென்னையை நெருங்கும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோதான் இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், மழை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications