Cyclone Fengal: சென்னை உட்பட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - லிஸ்ட் இதோ!!
சென்னை: ஃபெங்கல் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முழுவிபரம் வருமாறு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தற்போது நடந்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் என்பது உருவாகி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, "ஃபெங்கல்" புயலாக இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. திரிகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 310 கி.மீ., தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை (30-ம் தேதி) மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர்: இந்நிலையில் தான் பெங்கல் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங்கை வானிலை மையம் வழங்கி உள்ளது. இதையடுத்து மாணவ - மாணவிகளின் நலன் கருதி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செல்வக்குமார் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி: அதேபோல் ஃபெங்கல் புயல் எதிரொலி மற்றும் கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம்: மேலும் பெங்கல் புயல், மழை காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்ககப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதித்து அந்த மாவட்ட கலெக்டர் பழனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
சென்னை உள்பட 5 மாவட்டம்: அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்னர். இதன்மூலம் மொத்தம் 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: புயல், கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications