புதுச்சேரியை புரட்டி எடுத்த பெஞ்சல் புயல்! 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 48 செமீ மழை கொட்டித் தீர்த்தது!
புதுச்சேரி: வங்கக் கடலில் மையம் கொண்ட பெஞ்சல் புயல் ( பெஞ்ஜல்) (ஃபெஞ்சல்) (ஃபெங்கல்) (பெங்கல்) புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இந்த புயல் கரையைக் கடந்த பின்னரும் நகராமல் நிலை கொண்டிருக்கிறது. பெஞ்சல் புயலால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் பெஞ்சல் புயலால் ஒரே நாளில் 48 செமீ மழை பதிவாகி இருக்கிறது.
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தமிழ்நாடு, புதுச்சேரி மக்களை படாதபாடு படுத்திவிட்டது. பெஞ்சல் புயல் வலுவிழந்து திடீரென மீண்டும் உருவாகி அது கடக்கப் போகும் திசையும் புரியாத புதிராக பெரும் விளையாட்டை காட்டிக் கொண்டிருந்தது. இந்த பெஞ்சல் புயல் நேற்று புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.

பெஞ்சல் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரியின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 48 செமீ மழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செமீ மழை பெய்திருந்தது. தற்போது அதைவிட 2 மடங்கு அதிகமாக மழை கொட்டியுள்ளது. இதனால் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மிதந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரியில் புயல் மழையால் கடந்த 12 மணிநேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியின் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கு அருகே உள்ள தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24 செமீ மழை கொட்டியது. இதனால் கடலூரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications