மிக்ஜாம் புயல் ருத்ரதாண்டவம்: அண்ணா திமுக தலைமை அலுவலகத்துக்குள்ளும் கரை புரண்டோடிய பெரு வெள்ளம்!
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையில் கொட்டித் தீர்த்த பெருமழைக்கு அண்ணா திமுகவின் தலைமை அலுவலகமும் தப்பவில்லை. அண்ணா திமுக தலைமை அலுவலகத்துக்குள்ளும் வெள்ளம் கரைபுரண்டோடியதாக அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
வங்க கடலில் நிலை கொண்டு சென்னையை உருக்குலைத்துப் போட்டது மிக்ஜாம் புயல். வரலாறு காணாத பெருமழையை 2 நாட்களாக கொட்டிக் கவிழ்த்து விட்டு ஆந்திராவை நோக்கி நடையை கட்டி இருக்கிறது மிக்ஜாம் புயல்.

சென்னை மாநகரில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெருமழை பேய்மழை கொட்டியது. இன்று காலை முதல் சுமார் 11 மணிநேரம் இடைவிடாமல் கனமழை வெளுத்தது. சென்னையில் 35 மணிநேரத்தில் சராசரியாக 40 செ.மீ.க்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் சென்னை மாநகரும் புறநகரும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

சென்னையில் வெள்ளமாய் ஓடும் புயல் மழை நீர், ஏரிகளில் நிரம்பி ஓடும் உபரி நீர், ஏரிகளில் திறந்துவிடப் படும் உபரி நீர் என ஒட்டுமொத்தமாக சென்னையே முடங்கிக் கிடக்கிறது. வங்க கடலில் சீறிக் கொண்டிருந்த மிக்ஜாம் புயலோ, வெள்ள நீரை உள்வாங்காமல் அலைகழித்துக் கொண்டிருந்தது. தற்போது ஒருவழியாக சென்னையை விட்டு 100கிமீக்கும் அப்பால் ஆந்திராவுக்குள் நுழைந்து ஆட்டம் போடுகிறது மிக்ஜாம் புயல்.

இந்த புயலுக்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ராயப்பேட்டை தலைமை அலுவலகமும் தப்பவில்லை. ராயப்பேட்டை அதிமுக தலை அலுவலக முன்பகுதியில் இடுப்புக்கும் மேல் அளவு வெள்ள நீர் சூழ்ந்து நிற்கிறது. அலுவலகத்தின் உட்பகுதிக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தோடி இருக்கிறது. இது தொடர்பான படங்களை அதிமுக பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications