மிக்ஜாம்: சென்னையில் பேய்மழை எவ்வளவு மணி நேரத்தில் ஓயும்? எப்ப புயல் அபாயம் நீங்கும்? அடுத்து என்ன?
சென்னை: வங்க கடலில் மையம் கொண்ட மிக்ஜாம் புயல் இன்னமும் கரைக்கு வராத நிலையிலேயே கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை பெருவெள்ளத்தில் தத்தளிக்க அல்ல.. மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது மிக்ஜாம் கொண்டு வந்த பேய்மழை.
மிக்ஜாம் புயலானது சென்னையில் சராசரியாகவும் சரமாரியாகவும் 20 செ.மீ-க்கும் அதிமான மழையை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரின் அத்தனை புறநகர் பகுதிகளிலும் மிக குறைவான மணிநேரங்களில் மிக மிக அதீதமான மழையை கொட்டிவிட்டது மிக்ஜாம் புயல். வடகிழக்கு பருவமழையானது 6% பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் 29% கூடுதலாக பருவமழை பதிவாகி இருக்கிறது.

சென்னை புறநகர் பகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருப்பவை. பொதுவாகவே மழை காலங்களில் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தரும். தற்போதைய பெருமழையில் பெரும்பாலான புறநகர்கள் வெள்ளத்தில் மிதந்தும் மூழ்கியும் கொண்டிருக்கின்றன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த பெருமழையும் வெள்ளமும் எப்போதுதான் ஓயும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்னும் 6 மணிநேரத்துக்கு மழை தொடரத்தான் செய்யுமாம். இன்று மாலைக்குப் பின்னர்தான் மெல்ல மெல்ல மழையின் அளவுதான் குறையும். ஆனாலும் மழை நீடிக்குமாம். பின்னிரவில் இருந்துதான் மழை ஓயுமாம். அதாவது சென்னையில் இன்று முழுவதும் மழை தொடரவே செய்யும் என்கிறது வானிலை மையம்.
அதாவது தற்போது சென்னைக்கு கிழக்கே மிக்ஜாம் புயல் வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் திடீரென 10, 11 கி.மீ வேகத்தில் நகருகிறது; சில நேரங்களில் மணிகு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடக்க 6 மணிநேரம் அல்லது 7 மணிநேரம் ஆகும் என்பதால் இந்த கால கட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை அல்லது கனமழை நீடிக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். சென்னையில் இருந்து சுமார் 100 அல்லது 150 கிமீ தொலைவுக்கு அப்பால் புயல் நகர்ந்த பின்னர்தான் மழையானது ஓயவும் தொடங்குமாம்.












Click it and Unblock the Notifications