Montha: ஆந்திராவை ‘துவம்சம்’ செய்த மொந்தா புயல்! வேரோடு சாய்ந்த மரங்கள்.. 3778 கிராமங்களில் பாதிப்பு
காக்கிநாடா: வங்கக்கடலில் உருவான 'மொந்தா' புயல், ஆந்திராவின் காக்கிநாடா அருகே பலத்த சூறைக்காற்றுடன் நள்ளிரவில் கரையைக் கடந்தது. மொந்தா புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகின. ஏராளமான கிராமங்களில் சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன.
வங்கக் கடலில் உருவான 'மொந்தா' புயல், ஆந்திராவை நோக்கி நேற்று முன்தினத்தில் இருந்து பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே 'மொந்தா' புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

புயல், மழை, வெள்ளம் காரணமாக நேற்று மதியமே கடலோர மாவட்டங்கள் இருட்டத் தொடங்கின. பல கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இணையமும் துண்டிக்கப்பட்டது. புயலின் தாக்கம் ஒடிசா, தெலங்கானா மாநிலங்களிலும் எதிரொலித்தது. புயல் காரணமாக கடலோர பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
16 மாவட்டங்களில் உள்ள 233 மண்டலங்கள், 1,419 கிராமங்கள், 44 நகராட்சிகளில் மோந்தா புயலின் தாக்கம் இருந்தது. பலத்த காற்றுக்கு காக்கிநாடா, மசூலிப்பட்டினத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.
விசாகப்பட்டினம், காக்கிநாடா, மசூலிப்பட்டினம், நெல்லூர் ஆகிய இடங்களில் கடல் நீர், சுமார் 200 முதல் 500 அடி வரை முன்னோக்கி வந்தது. மீனவர்களின் மீன்பிடி படகுகள் சில அடித்து செல்லப்பட்டன. மரம் பெயர்ந்து விழுந்ததில் கோனசீமா மாவட்டத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழையால் மேலும் ஒருவரும் உயிரிழந்தார். கோனசீமா மாவட்டத்தில் 50-க்கும் மேற்பபட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
புயலின் தாக்கத்தால் ஆந்திராவில் 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகின. மேலும், 1.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களும் நாசமாகின. புயல் காரணமாக ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் நிரம்பின. புயலின் தாக்கத்தை தொடர்ந்து காக்கிநாடா மற்றும் மசூலிப்பட்டினத்தில் சுமார் 5 மணி நேரம் வரை சூறாவளி காற்றின் தாண்டவம் அரங்கேறியது. இதனால் இந்த இரு ஊர்களும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்தன.
மழை, புயல் காரணமாக தென் மத்திய ரயில்வே துறை 107 ரயில்களை ரத்து செய்தது. வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்ந்து பின்னர் ரயில் சேவை தொடக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆந்திராவுக்கு வரும் 18 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மீட்பு பணிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் லோகேஷ், அனிதா மற்றும் உயர் அதிகாரிகள் உடனுக்குடன் முடுக்கி விட்டனர். அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை செய்தனர்.
தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் மொந்தா புயலின் பாதிப்பு இருந்தது. ஹைதராபாத், மேதக், ரங்காரெட்டி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை பெய்து வந்தது. மொந்தா புயல் நேற்றிரவு கரையை கடந்தபோது இந்த மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.












Click it and Unblock the Notifications