கரையை கடந்தது ரெமல் புயல்.. வடக்கு நோக்கி நகர்ந்து.. படிப்படியாக வலுவிழக்கும் என அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல், நேற்றிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கக்கடலுக்கு இடையே கரையை கடந்திருக்கிறது. இருப்பினும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
25ம் தேதி காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை 17.30 மணி அளவில் 'ரீமல்' புயலாக வலுப்பெற்று, நேற்று (26-05-2024) காலை 05.30 மணி அளவில் "தீவிர புயலாக" வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது 26ம் தேதி காலை 08.30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இது மேலும், வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு, வங்க தேச கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையில் புயல் கரையை கடந்தது. இதனால் இந்த பகுதியில் பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியிருக்கிறது.
புயல் தொடர்பாக ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்ததால், போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த புயல் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலிலிருந்து, புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கெபுபாராவுக்கும் இடையே மோங்லாவின் தென்மேற்கே நிலை கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கும்.












Click it and Unblock the Notifications