மேற்கு தாம்பரத்தில் 15 அடிக்கு வெள்ளம்! குடோனிலிருந்து அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்
சென்னை: மேற்கு தாம்பரத்தில் குடோன் ஒன்றில் மழ வெள்ளம் புகுந்துவிட்டதால் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வடதமிழகம் வழியாக ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடந்தது. இந்த நிலையில் வடதமிழகமான சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகே புயல் நகர்ந்து சென்றதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மிக கனமழை பெய்தது.

நேற்று காலை சென்னைக்கு 100 கி.மீ. தொலைவில் புயல் இருந்த நிலையில் பயங்கர காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேய் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேற்கு தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. முடிச்சூர் பகுதிகளில் 15 அடி அளவுக்கு நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதனால் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்ட போது திடீரென நடுவழியில் மீனவர்களின் படகு நின்றுவிட்டது.
பின்னர் மீனவர்கள் சாதுர்யமாக இயக்கி பாதுகாப்பாக அவர்களை அழைத்து சென்றார்கள். இதனால் அச்சத்தில் அந்த படகில் குழந்தைகளுடன் இருந்த பெண்கள் அழுதனர். அது போல் மேற்கு தாம்பரத்தில் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தாம்பரத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததை அடுத்து அங்கிருந்த சில பெண்கள் லாரியின் கன்டெய்னர் மீது ஏறி உயிர் பிழைத்தனர். அவர்களை மீட்பு படையினர் வந்து காப்பாற்றினர். இந்த நிலையில் மேற்கு தாம்பரம் பகுதியில் சிலிண்டர்கள் வைக்கப்பட்ட குடோனில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.












Click it and Unblock the Notifications