இந்த தடவை மிஸ்ஸே ஆகாது..அடாத மழையிலும் விடாது ஆய்வு! ஹை அலர்ட்டில் சென்னை.. பம்பரமாய் சுழன்ற உதயநிதி
சென்னை: வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், அதிக அளவில் மழை பெய்தாலும் உடனடியாக வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வரும் நிலையும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

மேலும், தற்போது பருவ நிலை மாறுதல்களின் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் சில மணி நேரங்களிலேயே பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.
இதுபோன்ற மழை பெய்தாலும் மழை நீர் வடிவதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்நிலைகள் 18.10.2024 அன்று முதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் பராமரிப்பு பணிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த கால்வாய்களில் இதுவரை மொத்தம் 3,400 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2,600 டன் அளவிற்கு வண்டல் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அண்ணா நகர் கிழக்கு, மேற்கு, கணேசபுரம், அரும்பாக்கம், சின்மயா நகர், எம்.எம்.டி.ஏ காலனி, நடேசன் நகர், கீழ்ப்பாக்கம் மற்றும் ஓட்டேரி ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் எளிதாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநாகராட்சி சார்பில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மிதவை அமைப்பின்மீது பொக்லைன் இயந்திரம் பொருத்தப்பட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் காரணமாக மழைநீர் தடையின்றி, வேகமாக வெளியேறி வருவதை பார்வையிட்டார். தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணா தெருவில் உள்ள விருகம்பாக்கம் கால்வாயில் மிதவை அமைப்பின்மீது பொக்லைன் இயந்திரம் பொருத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் இருந்து மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வெளியேறுவதற்காக, கூவம் ஆற்றிற்கு செல்லும் இணைப்புக் கால்வாயின் முகப்பு பகுதியை அகலப்படுத்தும் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதையும், இணைப்பு கால்வாயின் முடியும்பகுதி அமைந்துள்ள அமைந்தகரை காவல் நிலையத்திற்கு அருகே கூவம் ஆற்றினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட அம்பேத்கர் பாலத்தின் கீழ் ஓட்டேரி நல்லா கால்வாயில் மிதவை அமைப்பின்மீது பொக்லைன் இயந்திரம் பொருத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் அலுவலர்கள் இரவு, பகலாக மேற்கொண்டு பொதுமக்களுக்கு உறுதுணையாக பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications