மழை.. மறுநாளே கடும் வெயில்.. நைட்ல கன மழை.. காதையே கிழிக்கும் இடி.. ரிப்பீட்டு! இதான் சென்னை நிலைமை
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக வானிலை மாறி வருகிறது. திடீரென மழை பெய்கிறது, மறுநாள் கடுமையான வெயில் வாட்டுகிறது. இந்த பேட்டர்ன் என்னவென்றே கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கிறது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயிலும் மழையும் மாறி மாறி இருப்பதால் இது எந்த மாதிரியான வானிலை என்பதை கண்டறிவதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தமிழகத்தில் கோடை காலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கத்தரி வெயிலின் போது ஒரு பகுதியில் சுட்டெரித்தாலும் மறு பகுதியில் ஐஸ்கட்டி மழை பெய்யத்தான் செய்தது.

இந்த நிலையில் கோடையில் சென்னையில் காலை 8 மணிக்கெல்லாம் கடுமையான வெயில் நிலவி வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று நிலவியது. இன்று மழையே வராது என கணிக்கும் அளவுக்கு வானம் தெளிவாக இருக்கும்.
ஆனால் இரவு மழை பெய்திருக்கும். சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும். ஒரு சில இடங்களில் சாலையில் நாற்று நடும் அளவுக்கு சேறும் சகதியுமாக இருக்கும். இதையடுத்து மறுநாள் அந்த மழைத் தண்ணீரை எல்லாம் ஸ்ட்ராவில் ஜூஸை உறிஞ்சி குடிப்பது போல் சூரியனார் வந்துவிடுவார். சரியான வெயில் அடிக்கும். நாக்கே வறண்டு போய்விடும்.
புழுக்கம் சொல்லி மாளாது. அதிக வெக்கை இருந்தால் மழை வரும் என்றும் சொல்வார்கள். இதை நம்பினால் அன்று மழையே வராது. இப்படி வெயில் அடிக்கும் அன்று இரவோ அதிகாலையோ கனமழை பெய்யும். பிறகு மழை பெய்த தடமே தெரியாத அளவுக்கு வெயில் அடித்து சாலையை சுத்தப்படுத்திவிடும்.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக இடி மின்னல் இருக்கும். ஆனால் கோடையில் பெய்யும் மழைக்கே காதை பிளக்கும் அளவுக்கு இடியும், கண்ணை பறிக்கும் அளவுக்கு மின்னலும் இருக்கும். இதுதான் கடந்த ஒரு வாரமாக சென்னையில் காலநிலையாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னையில் கனமழை வெளுத்து எடுத்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு, அதிகாலை வேளைகளில் கனமழை பெய்து வருகிறது. சூறைக் காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இரு நாட்களாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் இரவும் பலத்த காற்று வீசும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் சென்னைக்கு மிகவும் நல்ல மாதம். அதனால்தான் கோடையிலும் மழை பெய்து சென்னை மக்களை குளுமைப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் 10 நாட்கள் மழை பெய்தது. 3 முதல் 4 நாட்கள் இயல்பான நிலையில் இருந்தது.
மழை பெய்தாலே வடகிழக்கு பருவமழை காலத்தை போல் பூமியே குளிர்ந்து விடுகிறது. தற்போது இரவு நேரங்களில் மழை பெய்துவிடுவதால் மறுநாள் வெயில் காய்ந்தாலும் அந்தளவுக்கு புழுக்கம் தெரிவதில்லை. இதனால் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள். மழை இரவு நேரங்களிலும் பெய்வதால் அலுவலகம் விட்டு வருவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடுகிறது. அது போல் அதிகாலை வேளைகளில் பெய்தாலும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுதான் தற்போதைய சென்னை வானிலை குறித்து மக்களின் கவலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications