இந்த அளவுக்கு அநியாயம் செய்தால்! பெரும்பாக்கத்தில் சிறிய மழைக்கே ஏன் வெள்ளம் வராது சொல்லுங்க?
சென்னை: பெரும்பாக்கத்தில் எப்போது மழை பெய்தாலும் வெள்ள நீர் சூழ்வது ஏன் தெரியுமா?
இதுகுறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: பெரும்பாக்கம் இன்னமும் கிராம பஞ்சாயத்தாகவே இருக்கிறது. இங்கு சுமார் 1.20 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். பெரும்பாக்கத்தில் எல்லா இடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. இதன் பரப்பளவு 832 ஹெக்டேர் ஆகும்.

சதுப்பு நிலங்களுக்கு அருகே தாழ்வான பகுதிகள் ரியல் எஸ்டேட்களின் ஹாட்ஸ்பாட்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பகுதிகள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பெரும்பாக்கத்தை சுற்றி ஐடி நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் ரியல் எஸ்டேட் துறையும் இங்கு வளர்ந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிரவுண்ட் விலை ரூ.1 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 1.5 கோடிக்கு விற்பனையாகிறது.
இங்கு எழுப்பப்பட்டுள்ள உயர்ந்த கட்டடங்கள் ஒரு காலத்தில் விவசாய நிலங்களாக இருந்தன. இந்த நிலங்களில் விவசாயம் கைவிடப்பட்டுவிட்டது. இதையடுத்து கடைசியாக இதை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு உரிமையாளர்கள் விற்பனை செய்துவிட்டனர். குளோபல் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகள் லேசான மழை பெய்தாலோ மூழ்கும் அபாயம் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக இங்கு அனைத்து குடியிருப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஓஎம்ஆர் பகுதியில் ஒரு சென்ட் நிலம் கூட விற்பனைக்கு இல்லை. பெரும்பாக்கம் ஓஎம்ஆருக்கு அருகே உள்ளதாலும் குறைந்த விலையில் நிலங்களும் வாடகை வீடுகளும் கிடைப்பதாலும் இந்த பகுதி ஐடி ஊழியர்கள் குடியேற விரும்பும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது.
நொக்கியம்பாளையத்தை எடுத்துக் கொள்வோம். இதன் முக்கியச்சாலை பெரும்பாக்கம் வழியாக சென்று செம்மஞ்சேரியுடன் இணைகிறது. இந்த சாலையின் கிழக்கு பகுதியில் அதிக உயர்ந்த கட்டடங்களும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேற்கு பகுதிதான் பழைய பெரும்பாக்கம் பகுதி என அழைக்கப்படுகிறது. மிக்ஜாம் புயலின் போது குளோபல் மருத்துவமனையை சுற்றியுள்ள இடங்களில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் தேங்கியிருந்தன.
பெரும்பாக்கம் நகர்ப்புற பகுதியும் பாதிக்கப்பட்டது. கோவலம் ஆற்றில் பல்வேறு கால்வாய்களும் நீர் வழி பாதைகளும் பெரும்பாக்கம் வழியாக ஓடி சதுப்பு நிலங்கள் மூலமாக ஒக்கியம் மடுவு பகுதியில் கலக்கின்றன. அதாவது பெரும்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை வரை இந்த தண்ணீரானது பயணிக்கிறது. சிட்லபாக்கம் மற்றும் வேங்கைவாசல் ஏரிகளில் வரும் உபரி நீரும் பெரும்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
இதனால் சதுப்பு நிலப் பகுதியில் அதிக அளவு தண்ணீர் வழிந்தோடி அது ஒரு கால்வாய் போல் காட்சியளிக்கிறது. ஒட்டியம்பாக்கம் மற்றும் மதுரபாக்கம் பகுதியில் உள்ள உபரி நீராது அரசன்கலனி யில் பாய்கிறது. இது தனி கால்வாய் மூலம் முக்கிய சதுப்பு நில கால்வாயுடன் இணைக்கிறது. தாழம்பூர் டேங்க் பகுதியிலிருந்து வரும் தண்ணீரும் பெரும்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் கலக்கிறது. இதனால்தான் அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் மூழ்கடிக்கிறது.
பெரும்பாக்கம் ஏரியிலிருந்து சதுப்பு நிலம் வரையிலான கால்வாயில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. பொதுப் பணித் துறையின் புள்ளிவிவரங்களின் படி பெரும்பாக்கம் ஏரி பகுதியில் 358 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை 3 ஆண்டுகளுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் வருவாய் துறை அதிகாரிகளை பொருத்தவரை ஏரி பகுதியில் மட்டும் 3000 ஆக்கிரமிப்புகளும் அதன் அருகே உள்ள பகுதிகளில் 350 முதல் 400 வரை ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாக்கத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எங்களால் அகற்ற முடியாவிட்டாலும் அந்த பகுதியில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாத கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். 15 செ.மீ. வரை மழை பொழிவை மட்டும்தான் கால்வாய்களால் கிரகிக்க முடியும். மிகப் பெரிய மழை, புயல் உள்ளிட்டவைகளால் வெள்ளம் சூழ்கிறது. சதுப்பு நிலங்கள் எந்த காரணத்தை கொண்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றக் கூடாது.
பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதியில் மழை வெள்ளம் ஏற்படுவதை தடுக்க காணாமல் போன கால்வாய்களை இணைத்து வருகிறோம். இது 183 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவுறும் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு அனைத்து துறைகளும் இணைந்து ஒரு விரிவான திட்டத்தை அமைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications