அதிகரிக்கும் பனிமூட்டம்.. வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்! டெல்லியில் 110 விமானங்களின் சேவை பாதிப்பு
டெல்லி: வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. பனிமூட்டம் காரமணாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் ஏறத்தாழ 110 விமானங்களின் வருகை, புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
வழக்கமாக டிசம்பர் தொடங்கி ஜனவரி வரை நாடு முழுவதும் பனி மூட்டம் இருக்கும். ஆனால் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு பனி பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் 7 டிகிரி அளவுக்கு குளிர் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகனங்கள் சிறு சிறு விபத்தில் சிக்கியுள்ளன. சாலையோரம் இருப்பவர்களை, மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. அதேபோல காற்றின் தரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் டெல்லி விமான நிலையத்தில் 110 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது. ரயில் சேவையும் கடும் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வானிலை சூழல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, டெல்லியில் பனி மூட்டத்திற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, நகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது.
இந்த காலங்களில் வழக்கமாக பனி மூட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த முறை இயல்பைவிட அதிமாக பனிமூட்டம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக கூட இது போன்று கடும் பனிமூட்டம் நிலவலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பனிமூட்டம் தொடர்பாக ரெட் அலர்ட்டை கொடுத்திருக்கிறது. வட மாநிலங்களில் டிச.31ம் தேதிவரை மூடுபனியின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும், குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications