தத்தளிக்கும் தரமணி.. வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்.. பொதுமக்கள் வைத்த முக்கிய கோரிக்கை
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சென்னை தரமணி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் தற்போது வெளியேறி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழை பலத்த இடி மற்றும் மின்னலுடன் அதிகாலை வரை நீடித்தது. சென்னையில் அதிகாலையில் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி கடல்போலக் காட்சியளிக்கிறது. மழை காரணமாக பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை, மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை தரமணி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கத் தொடங்கியுள்ளது. தரமணியைப் பொருத்தவரை இயற்கையாகவே தாழ்வான பகுதி என்பதால் தரமணியின் கட்டபொம்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்குவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
தரைத்தளங்களில் இருப்பவர்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான பகுதிகள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் தென் சென்னை பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், தரமணியை சுற்றிருக்க கூடிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழை நீரை மோட்டார் பம்புகளைப் பயன்படுத்தி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தரமணிக்கு வரும் தண்ணீர் அருகில் உள்ள கல்லுக்குட்டை நீரோடையை நோக்கிச் செல்வது வழக்கம். ஆனால், இப்பகுதிகளில் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று நாள்களாக தொடர்ந்து தண்ணீர் தேங்கும் நிலை இப்பகுதியில் இருப்பதால் மோட்டார் பம்புகளின் மூலம்
தண்ணீரை அகற்ற வேண்டும். அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்லும் வழியை சீரமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், தரமணி தொடர்ந்து மழையால் பாதிக்கப்படக் கூடிய பகுதி என்பது அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். சோழ மன்னன் தெரு முதல் தந்தை பெரியார் தெரு வரை 23 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் அனைத்தும் தாழ்வான பகுதிகளில் உள்ளன. தரைத்தளத்தில் இருக்க கூடியவர்கள் மழை நீர் தேங்குவதால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒருவாரம் மழை பெய்தால் தான் பொதுவாக இதுபோன்று நிலை ஏற்படும். ஆனால், இன்று காலை பெய்த 1 மணி நேரத்திலேயே சாலைகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளன. வடிகால் ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தது உண்மை. ஆனால், தரமணி பகுதியில் வடிகால்கள் எங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளோம்.
படகுகள் அனுப்புகிறோம், முகாம் அமைக்கிறோம் என்கின்றனர். ஆனால் இந்த நீரை அகற்றுவதற்கு என்ன வழி என்பதை அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள நீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications