மிதக்கும் சேலம்.. புரட்டிப்போட்ட மழையால் வீடுகளில் நுழைந்த தண்ணீர்! சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
சேலம்: சேலத்தில் இன்று மாலையில் இடைவிடாது 2 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக சேலம் மாநகரில் உள்ள மழைநீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் நுழைந்தது. அதேபோல் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியதால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. அதுமட்டுமின்றி மாவட்ட வாரியாக பார்த்தால் தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கோவையில் 2 மணிநேரம் மழை கொட்டித்தீர்த்தது. அதேபோல் சேலத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது.
சேலத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு வானிலை நிலவரம் மொத்தமாக மாறியது. இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் சேலம் மாநகரில் மழை கொட்ட தொடங்கியது. தொடக்கத்தில் லேசாக பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறி கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, பச்சப்பட்டி, கிச்சிபாளையம், முகமதுபுரா உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணிநேரம் வரை மழை இடைவிடாது பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மெயின் ரோடுகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது.
அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்தது. குறிப்பாக முகமதுபுரா பகுதியில் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கழிவுநீரோடு மழைநீர் சேர்ந்து வீடுகளுக்குள் நுழைந்தது. துர்நாற்றம் வீசியது. அதேபோல் சாலையோரம் உள்ள கடைகளுக்குள்ளும் மழைநீர் நுழைந்தது. கடை, வீடுகள் என்று 100க்குமான கட்டங்களில் மழைநீர் நுழைந்துள்ளது.
திடீரென்று பெய்த இந்த மழையின் காரணமாக சேலம் மாநகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வீடுகளுக்குள் நுழைந்த தண்ணீரை வெளியேற்றுவது, சாலைகளில் தேங்கிய நீரில் நடந்து செல்வது என்பது கடும் சிரமத்தை அவர்கள் எதிர்கொண்டனர். இந்த பிரச்சனைக்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது கால்வாய்களை முறையாக துர்வாராமல் இருந்ததால் தான் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் ஒன்றாக சேர்ந்து வீடுகளுக்குள் நுழைந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications