தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எல் நினோ" தாக்கம் காரணமாக தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 326 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மழை குறைவு, வெப்ப அலை, வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால், மாநில அரசுகள் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் வெப்பம் அதிகரிப்பது, பருவமழை தாமதமாவது, சில பகுதிகளில் கனமழை பெய்தாலும் பல இடங்களில் மழை பற்றாக்குறை ஏற்படுவது போன்ற சூழல்கள் அதிகரித்து வருகின்றன.

El Nino Tamil Nadu weather

இந்த நிலையில், தற்போது மீண்டும் "எல் நினோ" குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் நிகழ்வுதான் "எல் நினோ".

எல் நினோ

இந்த மாற்றம் உலகளாவிய வானிலை அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவைப் பொறுத்தவரை, தென்மேற்கு பருவமழை பலவீனமடைவதற்கும், மழை அளவு குறைவதற்கும் இது முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையமும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சில பகுதிகளில் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும், வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

காரீஃப் பருவ சாகுபடி

இந்நிலையில், காரீஃப் பருவ சாகுபடிக்கான தயாரிப்புகள் குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் செவ்வாய்க்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, எல் நினோ தாக்கத்தால் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களில் உள்ள 326 மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மழை

இதனால் மாவட்ட நிர்வாகங்கள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மழை குறைவு ஏற்பட்டால் அதன் தாக்கம் நேரடியாக விவசாயத் துறையில் எதிரொலிக்கும். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள், மழையை நம்பி சாகுபடி செய்யும் தென் மாவட்டங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை சார்ந்த பகுதிகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு

ஏற்கனவே சில மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், மழை குறைந்தால் குடிநீர் பிரச்சினையும் உருவாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் வெப்பநிலை அதிகரிப்பதால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், கால்நடைகளுக்கும் சிரமம் ஏற்படலாம். இதனால், மழை பற்றாக்குறை ஏற்படக்கூடிய மாவட்டங்களை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

வறட்சி அபாயம்

அதேபோல், நீர் சேமிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வறட்சி ஏற்படக்கூடிய பகுதிகளில் நீர் பாதுகாப்பு, ஈரப்பத மேலாண்மை மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி திட்டங்களை மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பருத்தி மற்றும் பருப்பு வகை பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு

அதே நேரத்தில், விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை பரப்பக் கூடாது என்றும், அறிவியல் அடிப்படையிலான ஆலோசனைகளையே வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. வானிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப பயிர் திட்டங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே உரங்கள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+