புயலே உருவாகவில்லை.. ஆனாலும் தென் மாவட்டங்களில் ஏன் வரலாறு காணாத மழை? உண்மையான காரணம் என்ன?
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது . சில பகுதிகளில் மழை குறைந்தாலும்.. இன்னும் பல பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாள் முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், குமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு. நேற்றுபோல் இல்லையென்றாலும், அதி கனமழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம்: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் கோரம்பள்ளம் குளம் உடைந்து வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. நெல்லையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் 18 பைபர் படகுகள் ஈடுபட்டுள்ளன. மேலும் 30 படகுகள் வரவழைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் தொடர் கனமழையால் வெள்ள நீர் சூழ்ந்த மீனாட்சி கார்டன், பாறைகால் மடம், ஊட்டுவாழ்மடம் பகுதிகளில் படகுகள் முலம் பால், பிரட், தண்ணீர் உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
( இந்த போட்டோவில் இருக்கே வட்டமா! அதுதான் எல்லாத்துக்கும் காரணம்! தென் மாவட்டத்தை உலுக்கிய ஒரு விஷயம் )
வரலாறு காணாத மழை; கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அதிகனமழை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 24 மணி நேரத்தில் பெய்த 2வது அதிகபட்ச மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது. இது அவர்கள் மாவட்டத்தில் ஒரு வருடத்தில் பெய்யும் மழையாகும். அது ஒரே நாளில் பெய்துள்ளது. இதற்குமுன் 1992ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள காக்காச்சியில் 96.5 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
என்ன காரணம்: இந்த தொடர் மழைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்பட்டது. மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் சென்னைக்கு அருகிலேயே நிலைகொண்டு கனமழையை கொடுத்தது. 10 கிமீ வேகத்தில் சென்னைக்கு அருகிலேயே நகர்ந்தது. சென்னைக்கு அருகிலேயே இந்த புயல் மையம் கொண்டு இருந்தது .
இதன் காரணமாக சென்னையில் நாள் முழுக்க மழை பெய்தது. இது வெள்ளமாக மாறியது. நாள் முழுக்க அங்கே மழை பெய்ய இதுவே காரணம்.

புயல் இல்லை ஆனாலும் வெள்ளம்: அதேபோல்தான் தற்போது தென் மாவட்டங்களிலும் நடந்து உள்ளது. ஆனால் இந்த முறை புயல் உருவாகவில்லை. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கன்னியாகுமரிக்கு கீழே கடல் பகுதியில் நகராமல் நிலைகொண்டு இருந்தது. இதுதான் மழைக்கு காரணம்.
பொதுவாக.. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலுக்கு மேலே இருக்கும் போது கடலில் மிக கனமழையை கொடுக்கும். அதுவே நிலத்திற்கு அருகே இருக்கும் போது அது நிலத்தில் கனமழையை கொடுக்கும். அதுவே ஒருவேளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் இருந்தால் நிலப்பகுதியில் மிக மிக அதிக கனமழையை தரும்.
அதிலும் மேலடுக்கு சுழற்சியை விட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் குமரிக்கு அருகிலேயே இருந்தது. இதை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை நோக்கி காற்று தொடர் நெல்லை , தென்காசி, தூத்துக்குடி பக்கத்தில் இருந்து வந்து பெரிய சுழற்சியை ஏற்படுத்தியதே.. 4 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய காரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications