கனமழை வார்னிங்.. மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு
சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும், இதன் காரணமாக 25-ந் தேதி (இன்று) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வலுப்பெறக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும், இதன் காரணமாக 25-ந் தேதி (இன்று) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வலுப்பெறக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர், அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களுடன் பேரிடரை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் 28-ந் தேதி வரை கடல் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆழ்க்கடலில் மீன்பிடிப்புப் பணியில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை முன்னறிவிப்பின் காரணமாக, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி நெல்லை மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்னனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி நெல்லை மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு அணி நிலைநிறுத்தப்பட உள்ளது. கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வடகிழக்கு பருவமழையினால் தற்போது நீர்நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் காணொலிகாட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதிக மழைப்பொழிவு நிகழ்ந்துள்ள தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலைமைகள் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மதுரை மண்டல பொறியாளருக்கு உரிய அறிவுறுத்தல்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். தென்காசி, நெல்லை மாவட்டங்களில் நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளதாலும், தாமிரபரணியில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் எதிர்வரும் மழைப்பொழிவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
திருச்சி மண்டலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள், காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினத்தில் வடிகால்களில் தடையில்லாமல் நீர் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார்.
பெரும் வெள்ளம் ஏற்பட்டால், நிலைமையை துரிதமாக சமாளிக்கவும், கண்காணிக்கவும், பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் ஏதுவாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்கென்று தனித்தனி குழுக்களை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உரிய ஆலோசனை வழங்கினார். எதிர்வரும் மழைப்பொழிவை கணக்கிற்கொண்டு, நீர்த்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளின் நீர் இருப்பில் முழுக்கொள்ளளவிலிருந்து 10 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை கொள்ளளவை குறைத்து வைக்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மண்டலப் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications