இரவு 7 மணி வரை பிச்சு உதறப் போகுது மழை.. கோவை, திருப்பூர் உள்பட 14 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, சேலம், தென்காசி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, தென்காசி, மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. திருப்பூரில் இன்று ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் கொட்டியது.

இரவு 7 மணி வரை..
கோடை வெயில் தொடர்ந்து சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பாதை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "மேற்கு ராஜஸ்தான் முதல் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
5 ஆம் தேதி வரை கனமழை தொடரும்
4ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
5 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்" என வானிலை மையம் கூறியுள்ளது.














Click it and Unblock the Notifications