நிலவரம் எப்படி இருக்கு? டெல்லியில் இருந்து 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
டெல்லி: 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் மு.க ஸ்டாலின், மழை வெள்ளத்தால் எந்தெந்த இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், நிவாரண பணிகளை விரைந்து செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக தென் மாவட்டத்தில் யாரும் கண்டிராத அளவுக்கு நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் அரசு ஈடுபட்டுள்ளது. நெல்லையில் பல இடங்களில் கழுத்தளவு தண்ணீர் தேங்கியதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளம் பாதித்த 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், எந்தெந்த இடங்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா.. பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்களா என்றும் கேட்டறிந்தார்.
இதேபோல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இருந்தாலும் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உண்ண உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதேபோல் விரைந்து நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையின்போது காணொலி காட்சியில் இருந்தபடியே அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர், டிஜிபி, 4 மாவட்ட ஆட்சியர்கள், செயலர்கள், முதல்வரின் தனி செயலர், அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications