சென்னையை போல பெருமழை 'தாக்க' போகும் தென் தமிழ்நாடு- தாமிரபரணி வெள்ளம்- ஆட்சியர்கள் எச்சரிக்கை!
மதுரை: சென்னையில் பெருமழை கொட்டியதைப் போல தென் தமிழ்நாட்டிலும் 30 முதல் 50 செ.மீ மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்ன, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெருமழையைக் கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பதிவானது குறைந்தபட்சம் 20 செ.மீ; அதிகபட்சம் 45 செ.மீ என பதிவாகி இருந்தது. இந்த வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் தென் தமிழ்நாடு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாடு மாவட்டங்கள் பலவற்றுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், திருநெல்வேலி மாஞ்சோலை மலைப் பகுதியில் 30 முதல் 50 செ.மீ மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ளார். மாஞ்சோலை நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 செ.மீ மழை இதுவரை பதிவாகி இருக்கிறது. ஊத்து எஸ்டேட்டில் 17 செ.மீ மழை பதிவான. இன்று காலை முதலே தென் தமிழ்நாடு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி ம லை வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல குற்றாலம் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் கன்னியாகுமரியின் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் பெருமளவு திறக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இன்று காலை வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. இது தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல பெருஞ்சாணி அணையில் இருந்து 1,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திறபரப்பு அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் குற்றியார்- மாங்காய் மலை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீர் புகுந்தது.
மேலும் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3,000 கன அடிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் கவனமாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கையை நெல்லை, தூத்துக்குடி ஆட்சியர்கள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications