4 மாவட்டங்களில் மழை பிச்சு உதறப்போகுது.. நாளை 12 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை (மார்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால், அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் மேலும் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications