மக்களே உஷார்.. குடையெல்லாம் ரெடி பண்ணுங்க.. 3 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அலார்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து மண்ணையும் மக்கள் மனதையும் குளிர்ச்சி படுத்தி வருகிறது.

குறிப்பாக நேற்று சென்னையில் இரவு செம மழை பெய்தது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்ப நிலையை பொறுத்தவரை பாளையங்கோட்டையில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. அதாவது, 40.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கடலூர், தஞ்சை சேலம் மற்றும் புதுவையிலும் நேற்று வெப்ப நிலை கணிசமாக உயர்ந்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications