டெல்டாவில் 2 நாட்கள் சம்பவம்தான்.. சென்னைக்கு கனமழை இருக்கு! ஆனால்.. தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
சென்னை: சென்னையில் இன்று மழை பெய்யுமா? தமிழகத்தின் இதர பகுதிகளில் இன்று கிளைமேட் எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், சென்னையிலும் இன்று மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. பருவ மழை தொடக்கத்திலேயே செம மழை பெய்தது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரையில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் முழுவதும்வே ஓரளவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக இயல்பைவிட அதிகமாகவே மழை பெய்திருந்தது.

ஆனால் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் மழை எதுவும் பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தென்மேற்கு வங்க கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மூன்று நாட்கள் தாமதத்திற்கு பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதனால், தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர தொடங்கியுள்ளது.
இது வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் இன்று மழை பெய்யுமா? தமிழகத்தின் இதர பகுதிகளில் இன்று கிளைமேட் எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது;-

நேற்று இரவில் இருந்து கடலூர், பாண்டிச்சேரி, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி டெல்டா அருகிலே உள்ளது. அடர்ந்த மேகங்கள் அங்கே இருப்பதால் தொடர்ந்து அங்கு மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் போது, உள் மாவட்டங்களான கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, விருதுநகர் இது போன்ற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையிலும் இன்றும் மழை தொடரும். காற்றழுத்த தாழ்வு வலுப்பெற வாய்ப்பு மிக மிக குறைவு. இல்லை என்றே சொல்லிவிடலாம். சென்னையில் மக்கள் அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது. இன்றில் இருந்து நாளை நாளை மறுநாள் வரை மழை இருக்கும். அடுத்த இரண்டு மூன்று நாட்கள் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பிரதீப் ஜான் கூறுகையில், "மக்கள் என்ஜாய் பண்ணுற மாதிரியான மழை இருக்கும். 65 மில்லி மீட்டரே கனமழைதான். எனவே அந்த மாதிரி மழை இருக்கும். அது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இது போன்ற மழை 16 ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications