Chennai Rain: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. இரவிலும் மழை ஆட்டம் நிற்காது.. அலர்ட் மக்களே!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, கள்ளிக்குப்பம், ஒரகடம், பாடி, கொரட்டூர், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, திருமழிசை உள்ளிட்டப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஜூலை 8 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாதம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையோரம் இருக்கும் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை இல்லை. இந்நிலையில், இன்று மாலையே சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.
மழை தொடரும்
இந்த மழை அடுத்த 10 நாட்களுக்குத் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மழை அறிவிப்பு.. 10 வறண்ட நாட்களுக்குப் பிறகு சிறிது நிவாரணம் தரும் வகையில் இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான கேடிசிசி பகுதிகளில் கிட்டத்தட்ட 10 வறண்ட நாட்கள் நிலவிய நிலையில், இப்போது சிறிய நம்பிக்கை தென்படுகிறது. இன்று முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் குறுகிய மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 10 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் இந்த குறுகிய கால மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரம் நகரத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்யாது எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை
இந்நிலையில் தான், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணா நகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம், வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல, புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், பெரம்பூர், மாதவரம், செங்குன்றம், மணலி, அம்பத்தூர், ஆவடி, கள்ளிக்குப்பம், ஒரகடம், பாடி, கொரட்டூர், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நீலகிரி, கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கோவை மலைப் பகுதியையொட்டியுள்ள இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications