8 மணி நேரத்தில் 18 செமீ மழை.. வெள்ளக்காடாக மாறிய மும்பை.. இன்றும் கனமழை எச்சரிக்கை
மும்பை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் 8 மணி நேரத்தில் 18 செமீ மழை பெய்ததால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் விமான சேவை, ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்திற்கு 7 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக மும்பையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்தது. குறிப்பாக நேற்றும், நேற்று முன் தினமும் மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ச்சியாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் அதிகாலை முதல் மதியம் வரையிலான 8 மணி நேரத்தில், 18 செமீ அளவுக்கு தலைநகர் மும்பையில் மழை கொட்டியதால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறின. ரயில் நிலையங்களில் தண்டவாளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்கள் 10 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோல் விமான நிலையங்கள் ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கியதால் நேற்று விமான சேவை பாதிக்கப்பட்டது.
சாலைகளும் தண்ணீரில் மூழ்கியதால் பஸ் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. சாலைகள் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் மிதந்தபடி சென்றதை பார்க்க முடிந்தது. பல இடங்களில் பஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன.
மும்பை கிழக்கு, மேற்கு விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மழை வெள்ளத்திற்கு 7 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்றும் மும்பை, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications