நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. தொடர் கனமழை காரணமாக கலெக்டர்கள் அறிவிப்பு!
நீலகிரி: கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதலே மழை தொடர்ந்து வந்தது. பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அதிக அளவில் மழை பொழிந்து வருவதால் நஞ்சநாடு அருகே உள்ள கப்பத்தொரை பகுதியில் விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்துள்ளது. மேலும் இத்தலார் கிராமத்தில் வீட்டின் முன் பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. கூடலூர் பகுதிகளில் அதிக மழையின் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 20.4 செ.மீ மழை பெய்துள்ளது. எமரால்டில் 12.3 செ.மீ, அப்பர் பவானியில் 10.6 செ.மீ, சேரன்கோட்டில் 8.3 செ.மீ, பந்தலூர் 8.4 செ.மீட்டர், கூடலூரில் 7 செ.மீ, தேவாலாவில் 93 6.8 செ.மீ, நடுவட்டத்தில் 6.3 செ.மீ, ஒவேலியில் 6.2 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கோவை மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications