அப்படி மழை கொட்டியும் மின் தடை இல்லை.. தமிழக அரசு சமாளித்தது எப்படி? தங்கம் தென்னரசு சொன்ன காரணம்!
சென்னை: சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை நேற்று முன்தினம் இரவு பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் முதலமைச்சர் அறிவுரையின்படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் சென்ற ஆண்டு பெய்த கனமழையின் போது பெருவாரியான இடங்களில் நீர் தேங்கியது. அவ்வாறு நீர் தேங்கிய பகுதிகளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் 29.11.202 அன்று குறுகிய நேரத்தில் சராசரியாக 15 செ.மீ மழை பெய்த போதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மின் பராமரிப்பு பணிகள் 19.07.2023 அன்று தொடங்கப்பட்டு 29.11.2023 வரை நடைபெற்று 11,47,103 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 1545 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 6,25,341 மரக்கிளைகள் மின்வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட்டது. 55,830 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை 29/11/2023 அன்று பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னுாட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின் மாற்றிகள் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேங்கிய பகுதிகளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 3,00,887 மின் கம்பங்கள், 14,187 கி.மீ மின் கம்பிகள், 19,759 மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது. மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 15,300 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை மின்னக எண் - 94987 94987 வாயிலாக ஒரே நேரத்தில் 65 புகார்களை பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மின் பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் புகார்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications