லிஸ்ட்டில் 9 மாவட்டங்கள்.. காலை 10 மணி வரை மழை கொட்டும்.. வானிலை மையம் தந்த முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் என நாம் அனைவரும் நினைத்தோம். இதற்கு முக்கிய காரணம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தது தான்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 28 ம் தேதி வரை நீடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய கோடை மழையால் கத்திரி வெயிலில் இருந்து நாம் தப்பித்து விட்டோம்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மிதமானது முதல் கனமழை வரை மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை இல்லாவிட்டாலும் கூட வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் காணப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் தான் இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடி, மின்னல் கூட இருக்கலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி காலை 10 மணி வரை தூத்துக்குடி, ராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications