கோவை, குன்னூரில் கொட்டி தீர்த்த கோடை மழை! இயல்பு நிலைக்கு திரும்பியது ஊட்டி.. மக்கள் மகிழ்ச்சி
கோயம்புத்தூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது. குடிநீர் வறண்டு போன கோவையில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கோவை:கோவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாக வெயில் பதிவாகியிருந்ததால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் குடிநீர் கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எனவே, நீலகிரியின் அப்பர் பவானியிலிருந்து கோவையின் பில்லூர் அணைக்கு நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கோவையின் சிறுமுகை, காந்தையூர், மேட்டுப்பாளையும் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பலத்த காற்று காரணமாக ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்திருக்கின்றன.
நீலகிரி: அதேபோல நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் எங்கும் சுட்டெரித்த வெயில் நீலகிரியையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது வனப்பகுதிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்தும் ஆங்காங்கே காட்டு தீயும் பரவி வந்தது.
இந்நிலையில் இன்று குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மற்றும் குன்னூர் நகர பகுதியில் திடீரென மழை பெய்ததால் கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான காலநிலை காணப்படுகிறது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர்: கோடை காலத்தில் அதிகம் வெயில் பதிவாகும் முதல் மூன்று மாவட்டங்களில் திருப்பத்தூரும் ஒன்று. சில நேரங்களில் இந்த மாவட்டத்தில்தான் அதிக அளவு வெயில் பதிவாகியிருக்கும். வெயில் மட்டுமல்லாது அனல் காற்று இங்கு கடுமையாக இருக்கும். ஜவ்வாது மலையை ஒட்டி இந்த மாவட்டம் இருந்தாலும், வெயிலின் தாக்கம் மக்களை ஒரு வழி செய்துவிடும். இந்த மாவட்டத்தில் பாலாற்றின் கிளை ஆறு ஓடுகிறது. ஆனால், தற்போது இந்த ஆறு முற்றிலுமாக வற்றிப்போயிருக்கிறது.
கடந்த சில நாட்களாக இங்கு 105 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியுள்ளது. திருப்பத்தூரின் ஏலகிரி மலை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் வெப்பநிலை ஓரளவு குறைய தொடங்கியிருக்கிறது.
சேலம்: இந்த முறை கோடை வெயிலுக்கு சேலமும் தப்பவில்லை. ஏற்காடு சென்றால் கொஞ்சம் குளுமையாக இருக்கும் என்று நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. அந்த அளவுக்கு ஏற்காடு காய்ந்து போயிருந்தது. இந்நிலையில் இன்று சேலம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது. மழை காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications