மேலும் மேலும் அசையாமல் குவிந்த மேகங்கள்.. அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது.. வானிலை அப்டேட்
சென்னை: சென்னையில் நேற்றிரவு பலத்த மழை கொட்டிய நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு இல்லை என்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், அதிதீவிர கனமழைக்கான வாய்ப்பு குறையும் என்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைய இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது.. அதேபோல, இன்று டெல்டா மாவட்டங்களிலும், நாளை ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 440 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தம்: இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்லும்போது, "வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்தம் இன்னும் தொலைவில் உள்ளது.. மழை 10 செ.மீ என்றால் தண்ணீர் தேங்கும். அதுவே 20 செ.மீ தண்ணீர் என்றால் வெள்ளம் வீட்டிற்குள் வரும். அந்த விழிப்புணர்வைத்தான் நான் எல்லோர்க்கும் சொல்ல முயற்சிக்கிறேன்.
மேகங்கள் கொஞ்சமும் பலவீனமடைவதாக நான் நினைக்கவில்லை.. அது மேலும் மேலும் குவிந்து அசையாமல் இருப்பதாக தோன்றுகிறது. சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மிமீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார்.
வானிலை மையம்: அதேபோல, சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இந்நிலையில், இன்றும், நாளையும் சென்னையில் அதிதீவிர கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றும், இதனால் தமிழகத்தில் 12 முதல் 21 செ.மீ., மழை பொழிவுக்கு இன்று வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது.
நாளை, சென்னை மற்றும் புறநகரில், ஒரு சில இடங்களில் இன்று, 25 செ.மீ.,க்கு மேல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனால், சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதி தீவிர கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதிதீவிர கனமழை: ஆனால், சென்னை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, சென்னையில் மழை தொடரும், ஆனால், அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பதிவான மழையின் அளவு குறித்து வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.. அதன்படி, நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செமீ மழை பெய்துள்ளது.. செங்குன்றத்தில் 28 செமீ மழை திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது.. சென்னையை அடுத்த ஆவடியில் 25 செமீட்டரும், பொன்னேரியில் 16 செமீ மழையும், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூரில் தலா 9 செமீ மழையும் பதிவாகியிருக்கிறது.
ஆரம்பித்த மழை: இந்நிலையில், சென்னையில், நேற்று இரவில் சற்று மழை விட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை முதல், சென்னையின் பல இடங்களிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இன்று மதியத்திற்கு மேல், சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், சென்னைவாசிகள் அச்சப்பட தேவையில்லை என்றும், பிரதீப் ஜான் நம்பிக்கை தகவலை வெளியிட்டிருக்கிறார்.. ஒரு பேட்டியில் அவர் சொல்லும்போது, "இன்று அதி கனமழை பெய்யும் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை.. வடசென்னை, திருவள்ளூர் பகுதிகளில் மட்டுமே நேற்றிரவு கனமழை பெய்திருக்கிறது.. எனவே, சென்னைக்கு ஆபத்து இல்லை.. எல்லா மழையுமே வெள்ளம் கிடையாது.. முதல் மழையே பெரிய மழையாக வாய்ப்புமில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications