“கத்திரி வெயில்.. பஞ்சாங்கத்தில் மட்டும்தான் இருக்கு! அறிவியலில் இல்லை” - வானிலை மைய இயக்குநர்
சென்னை: கத்திரி வெயிலை கண்டு மக்கள் அச்சமடைந்து கொண்டிருக்கும் நிலையில், கத்திரி வெயில் என்பது பஞ்சாங்கத்தில் சொல்லப்படுவதுதான் என்றும் அது அறிவியல் பூர்வமானது கிடையாது என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
கத்திரி வெயில் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கத்திரி என்பது தோஷங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு லக்னம் ஆட்சியில் இருக்கும்போது அந்த லக்னத்திற்கு இரண்டாவது மற்றும் 12வது இடத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் இருந்தால், அதற்கு கத்திரி தோஷம் என்று பெயர். இந்த தோஷ காலத்தில் எந்த நல்ல செயலுக்கு நேரம் குறிக்கக்கூடாது என்று சொல்வார்கள். இந்த காலம்தான் கத்திரி தோஷக் காலம் என்று கூறுவார்கள் என சொல்லப்படுகிறது.
இது பற்றி விளக்கமளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா, "கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் பூர்வமானது அல்ல. அது ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானது. பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்திரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது. எனவே இது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடாது" என்று கூறியுள்ளார்.
சாமானிய மக்களை பொறுத்தவரை கத்திரி வெயில் என்றால், வெயில் தீவிரமாக இருக்கும் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த 4ம் தேதி தொடங்கியதாக சொல்லப்படும் கத்திரி வெயில் மே 28ம் தேதி வரை நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெயில் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்தை பொறுத்தவரை, "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதேபோல தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.
எனவே நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.8 முதல் 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை தொடங்கி மே.9ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (06-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (07-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என வானில் மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications