சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. காலையிலேயே ஜில் அப்டேட்.. மற்ற மாவட்டங்களில் எப்படி? வானிலை
சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் படிப்படியாக வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தலைநகர் சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் நிலவி வருகிறது. அதிலும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி எடுக்கிறது. கடந்த 2 நாட்களாக வெயில் அதிகமாக இருந்து வருகிறது. மழை கிட்டத்தட்ட குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். அக்னி நட்சத்திரம் வரும் 4 ஆம் தேதியே தொடங்கினாலும் அன்றிலிருந்து தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை கொளுத்தி எடுத்தது.

இன்றைய வானிலை அப்டேட்
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதன்பிறகு நேற்று மற்றும் நேற்று முன் தினம் ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மட்டும் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் வெயில் தான் கொளுத்தி எடுத்தது. எனினும் நேற்று இரவு தஞ்சை, திருவாரூர், அரியலூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், தலைநகர் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வரும் 15 ஆம் தேதி வரை சான்ஸ்
தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வருகின்ற 13 ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். எனவே, இன்று தமிழகத்தில் இன்று சனிக்கிழமை முதல் மே.12 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.13ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே. 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிளை பொறுத்தவரை இன்று சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்று தொடங்கி மே.12 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
மே.10 முதல் 12 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகளை பொறுத்தவரை இன்று தொடங்கி மே.11ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை. மே. 12 மற்றும் 13ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி மே.13 வரை எச்சரிக்கை ஏதுமில்லை எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications