தமிழகத்தை நோக்கி நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு.. சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழை அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும், இன்று சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில்தான், வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதன் காரணமாக வரும் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணபடும். நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான - பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியை ஒட்டியும் இருக்க கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. நேற்று பகல் நேரங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. நேற்று இரவும் சென்னையில் பெரிதாக மழை பெய்யவில்லை. ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.












Click it and Unblock the Notifications