மிரட்டும் மிக்ஜம் புயல்.. தயார் நிலையில் சென்னை மாநகராட்சி.. மேயர் பிரியா சொன்ன முக்கியமான மேட்டர்
சென்னை: மிக்ஜம் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை மேயர் பிரியா சில முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
இப்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது இன்று புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

வடமேற்கு திசையில் நகரும் இந்த புயல் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் நாளை டிசம்பர் 4ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல்: இது புயலாக மாரும் முன்பே நல்ல மழை இருந்தது. குறிப்பாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை நகர் பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் இரவு முழுக்க பரவலாக மழை பெய்து வந்தது. இன்றைய தினம் ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது இது புயலாகவும் மாறியிருக்கிறது.
இதற்கிடையே புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்றைய தினம் சென்னை மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, வெள்ளத்தை தடுக்க எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விளக்கினார்.
மேயர் பிரியா: இது தொடர்பாக அவர் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து மிக தீவிர கனமழை பெய்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி இரவு 7 - 9 மணி வரை 14 முதல் 20 செமி வரை பல இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் மாளிகையில் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மேலும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் விளக்கியிருந்தார்.
வரும் 2 முதல் 5 வரையிலான தேதிகளில் கனமழை இருக்கும் என்று வானிலை மையம் சொல்லி இருக்கிறது. குறிப்பாக 4ஆம் தேதி மாலை புயல் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மண்டலம் வாரியாக எங்கே கூடுதல் மோட்டர்கள் தேவை என்பதை கண்டறிந்து அங்கே இரவிலேயே மோட்டர் தர ஏற்படு செய்யப்பட்டுள்ளன.
தயார் நிலை: 23000 ஆயிரம் பணியாளர்கள் இப்போது வெள்ள பாதிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் 16 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் கூடுதலாக 100 கமேண்டோ வீரர்களும் இறங்கியுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவும் தயாராக இருக்கிறது. புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்.
மண்டல் வாரியாக எங்கே பொதுமக்கள் தங்கும் பகுதிகள், உணவு தேவையிருந்தால் அதை தயாரிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். மழை வெள்ளத்தை சமாளிக்க மண்டலம் வாரியாக 20 லட்சம் ரூபாயை அளித்துள்ளோம். எனவே இந்த முறை புயலை வெற்றிகரமாக சமாளிப்போம் என்பதில் நம்பிக்கை உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications