இனி வெயிலுக்கு குட்டி பிரேக்.. தென் தமிழகத்தில் மழை பெய்யும்.. வெளியான ‛கூல்’ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் வெப்பம் வெகுவாக குறைந்திருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மார்ச் மாதத்தில்தான் வெயில் தலைகாட்ட தொடங்கும். மார்ச் இறுதியில் தொடங்கி ஜூன் இறுதி வரையில் வெயில் அதிகபட்சமாக இருக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. வெயில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா என தென் இந்தியா முழுவதும் வெயில் பட்டையை கிளப்பியது. இந்த வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு பதிகுயை தவிர மற்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறியிருந்தது. அதாவது, வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகள், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த முறை வெப்பம் இயல்பாகதான் இருக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பீகார் மேற்கு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமாக இருக்கும்" என்று எச்சரித்திருந்தது.
அதேபோல கடந்த ஒரு சில நாட்களாக பதிவாகி வந்த வெயில் ஆப்பிரிக்காவில் பதிவானதை விட அதிகம் என்றும் தெரிய வந்தது. அதாவது, இந்தியாவில் நேற்று முன்தினம் பிற்பகல் நிலவரப்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள் மாவட்டங்களில் வெயில் 100-107 டிகிரி பாரன்ஹீட்டை வரை பதிவாகியிருந்தது. ஆனால் ஆப்பிரிக்காவில் மாலி, நைஜர், சூடான், வடக்கு எத்தியோப்பியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும்தான் வெயில் 99-102 டிகிரியை அளவில் பதிவாகியுள்ளது.
மற்றபடி, தென்னாப்பிரிக்கா, ஜாம்பியா, டான்சானியா, கென்யா, எகிப்து, லிபியா, அல்ஜீரியா உள்ளிட்ட பகுதியில் வெயில் குறைவாகதான் இருக்கிறது. வழக்கமாக இந்த பகுதிகளில் வெயில் அதிமாக இருந்து இந்தியாவில்தான் குறைவாக இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வெயில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான தெர்மல் இமேஜ் செயற்கைக்கோள் படங்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டன.
இந்நிலையில் வெயில் இந்தியா முழுவதும் வெகுவாக குறைந்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். சென்னைக்கான வானிலையை கணித்து சொல்லும் 'சென்னை ரெய்ன்ஸ்' வானிலை மையம், "ஏப்ரல் 10ம் தேதியான இன்று வெயில் குறைந்திருக்கிறது. அதேபோல தென் தமிழக பகுதிகளில் மழைக்கான வாய்ப்பும் இருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் வெயில் 95-96 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications