விடியவிடிய பொளந்து எடுக்க போகுது கனமழை.. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழை கொட்டும்.. கவனம் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை உட்பட சில மாவட்டங்களில் நாளை காலை வரை கனமழை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகவே ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெயரளவில் மழை இல்லாமலேயே இருந்தது.

இதனால் எங்கு இந்தாண்டு போதியளவில் மழை பெய்யாமல் போகுமோ என்று அஞ்சப்பட்டது. இருப்பினும், இப்போது சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வானிலை மையம் முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது.
நல்ல மழை: இப்போது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இப்போது மாநிலத்தில் தேனி, திருப்பத்தூர், மதுரை புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையிலும் கூட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம், டிஜிபி அலுவலகம், செங்கல்பட்டு, மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் தல 50 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல புழல், மணலி, அம்பத்தூர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதற்கிடையே இன்று மதியம் சென்னை வானிலை மையம் வெளியிடும் செய்திக்குறிப்பில் டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்கள் என மொத்தம் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது. சென்னையில் இரு நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே வானிலை மையம் இப்போது புதிய அல்ர்டை கொடுத்துள்ளது. அதில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடிய விடிய மழை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு திசை காற்று வலுவடைந்துள்ளதாலும் வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
இதுவரை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பெரியளவில் மழை இல்லாமலேயே இருந்தது. இப்போது தான் இங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. எனவே, வரும் நாட்களில் மழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. மேலும், வரும் நாட்களில் வங்கக் கடலில் சலனங்கள் ஏற்படும் என்றும் இதனாலும் கூட மழை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 3 மணி நேரம்: அதேபோல அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை கொட்டும் என்பது குறித்தும் வானிலை மையம் தனியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மொத்தம் 29 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications