"மின்னல் வேகத்தில் மீட்பு பணி! இரண்டே நாளில் மீண்டும் பழைய சென்னை!" அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் நம்பிக்கை
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னை நகரை மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் நேற்று முன்தினம் முதலே கனமழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த மழை விடிய விடியக் கொட்டி தீர்த்தது.

இந்த கனமழை தலைநகர் சென்னையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. பல மணி நேரம் வரை விடாமல் கனமழை கொட்டிய நிலையில், முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது.
மிக்ஜாம் புயல்: பொதுவாக மழை நீர் கடல் வழியாகச் சென்று ஆற்றில் கலக்கும். ஆனால், இந்த முறை கடல் சீற்றம் காரணமா கடல் வெள்ள நீர் உள்வாங்கவில்லை. இந்தச் சிக்கல் காரணமாக நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது. மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து விலகிச் சென்றதும் நேற்றிரவு முதல் மழை சற்று குறைந்தது. இதையடுத்து உடனடியாக மீட்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
இப்போது நகரில் இருக்கும் பல முக்கிய சாலைகளில் மழை நீர் வடிந்துவிட்டது. மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் விரைவாக நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்து இடங்களில் மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீட்புப் பணிகள்: மாலைக்குள் 75% இடங்களில் நீர் வெளியேற்றப்படும். மீட்புப் பணிகளில் கூடுதல் நபர்களை ஈடுபடுத்த உள்ளோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை 400+ முகாம்களில் 18230 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல வீடுகளிலேயே தங்கியுள்ள 8 லட்சம் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.
நேற்றிரவு மழை நின்றுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் அண்டைய மாவட்டங்களில் மீட்புப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. சென்னையைப் பொறுத்த வரை வெளிவட்டங்களில் இருந்து சுமார் 5000 பேர் அழைத்துள்ளோம். இதனால் மீட்புப் பணிகள் வேகமாக நடக்கும். நீரை அகற்றும் பணிகள், கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இன்றிரவுக்குள் முடிந்தவரை நீரை அகற்றிவிடுவோம். மரங்களையும் நீக்கிவிடுவோம். மீதமுள்ள பணிகள் நாளை முடிக்கப்படும்.
பழைய சென்னை: மீண்டும் பழைய சென்னை என்ற சூழலை உருவாக்குவோம். சென்னையில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக 2015ஐ காட்டிலும் அதிகளவில் மழை பெய்துள்ளது. முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்த மழையிலும் கூட பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருக்கிறது. தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அரசு தன்னால் முடிந்தவரை அனைத்து மீட்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.. சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகளைப் பொறுத்தவரை அங்கிருந்து திறக்கப்படும் நீர் அளவு குறைந்துள்ளது. அங்குள்ள நிலைமையையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications