எங்க பகுதியை வந்து பாருங்க ஐயா.. செந்தில் பாலாஜியை வற்புறுத்தி அழைத்துச் சென்ற மக்கள்
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, சிங்காநல்லூர் அருகே உள்ள கதிரவன் கார்டன் பகுதி மக்கள் அமைச்சரை வற்புறுத்தி தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று சேறும் தகதியும் நிறைந்திருப்பதை காட்டினர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவையிலும் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கோவையில் நேற்று மாலை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. காலை வேளையில் பெரிதாக மழை இல்லை என்றாலும் மாலையில் வெளுத்து வாங்கியது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சாயிபாபா காலனி, லாலிரோடு, சங்கனூர் சாலை, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மழை வெள்ளத்தில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக கோவையில் இன்று அரைநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளான கதிரவன் லே அவுட், சிவானந்த காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். கோவை கதிரவன் கார்டன் பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்ட பொழுது , அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரை வற்புறுத்தி தங்கள் பகுதிக்குள் அழைத்துச் சென்று சேறும் சகதியும் நிறைந்து ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகளை காட்டினர்.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே கதிரவன் கார்டன் பகுதி அமைந்துள்ளது. இந்த கதிரவன் கார்டன் பகுதியின் அருகில் உள்ள சங்கனூர் ஓடையிலிருந்து வெளியேறிய தண்ணீர் தெருக்களில் புகுந்ததால் வீடுகளுக்கு முன்பு சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சங்கனூர் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கதிரவன் கார்டன் பகுதியினை சுத்தப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மழை பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளை கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார் உட்பட அதிகாரிகள் , மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
அமைச்சர் ஆய்வு செய்யும் தகவல் அறிந்து அங்கு வந்த கதிரவன் கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சரை வலியுறுத்தினர். மக்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக கதிரவன் கார்டன் பகுதிக்குள் சென்று தெருக்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார். மேலும், உடனடியாக அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
சங்கனூர் ஓடை முழுமையாக தூர்வாரப்படாமல் இருப்பதால், மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. குப்பை கூளங்களுடன், மருத்துவ கழிவுகளும் தெருக்களுக்குள் புகுந்து விடுவதாக அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் தொடர்ந்து சிவானந்தா காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications