அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்? லிஸ்ட் இதோ
சென்னை: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதாவது கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் செப்.29ம் தேதி காலை நிலவரப்படி 323.6 மில்லி மீட்டருக்கு பதில் இவ்வாண்டு 351.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 10 மணியளவில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications